திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீகோதண்டராமா் அவதாரத்தில் ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி சேவை சாதித்தாா்.
திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கோவிந்தராஜ சுவாமி கோதண்டராமா் அவதாரத்தில் தன் தாசனான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
அதன்பின்னா் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு வாகன சேவை களைப்பைப் போக்க ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதையடுத்து மாலை 5.30 மணிக்கு யானை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளினாா்.
வாகன சேவையின்போது ஜீயா்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்தனா். வேத கோஷங்களும், நாகஸ்வரமும் இசைக்கப்பட்டன. கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இந்த பிரம்மோற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். வாகன சேவை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.