ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் விழாக்களிலேயே மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இந்த விழா டிச.3- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 24 -ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைகிறது.
4 -ஆம் தேதி தொடங்கும் பகல்பத்து விழாவின் கடைசி நாளான 13 -ஆம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 14 -ஆம் தேதி வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவர்.
விழாவையொட்டி புதன்கிழமை காலை 11.30-க்கு ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் முன் வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசீர்வாதத்துடன் முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக முகூர்த்தக்காலுக்கு புனித நீர் தெளித்து, சந்தனம் பூசி, மாவிலை மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் முன் மேலும் பந்தல்கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும்.
விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து, மண்டல இணை ஆணையர் அர. சுதர்சன், கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி, உள்துறைக் கண்காணிப்பாளர் மா. வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.