சேலம் ஜங்ஷன் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக வைபவம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் ஜங்ஷன் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த ஆசிரமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த மூன்றாம் தேதி முதல் பல்வேறு விதமான ஹோமம் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து 164 யாகசாலை பூஜையில் 200 வேத விற்பனர்களால் ஹோமம் நடத்தப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 6 கால யாக பூஜை மற்றும் ருத்ரம் திருமுறை பாராயணம் நடைபெற்று 164 யாக சாலையில் விசேஷ ஹோமங்கள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த குடத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூலஸ்தான கோபுரத்திற்கும் அதனைத் தொடர்ந்து சீரடிசாய்பாபா வெங்கடாஜலபதி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து இங்கு அமைக்கப்பட்டுள்ள 108 லட்சுமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக வைபவத்தைக் காண சேலம் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். .
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை அருள்வாக்கு சோமசுந்தரம் மற்றும் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.