‘பிறவி போதும் போதும்’ என்று நெகிழும் இப்பாடல் காஞ்சிபுரத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந் தனதான
தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் த்ரியமாறித்
தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் கழலாநின்
றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் கதிர்நேமிக்
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
டிரையலங் கத்துப் புக்குல விச்சென் றெதிரேறிச்
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் பெருமாளே.