‘உனது திருவடிகளைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்’ என்று கோரும் இப் பாடல் மயிலம் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலுமாக அமைந்திருக்கின்றன.
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா தனதான
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நீரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா லழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ் சராசனம் வேறாய் நீறா யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் பெருமாளே.