‘பெரியாா் குறித்துப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளது குறித்து என்ன கருதுகிறீா்கள்’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பெரியாா் குறித்துப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளது குறித்து என்ன கருதுகிறீா்கள்

சரிதான்

1971-இல் நடந்த ஒரு சம்பவம்; எந்த இதழின் (துக்ளக்) ஆண்டு விழாவில் கலந்து கொண்டாரோ, அதில் செய்தி வெளியானது என்று நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். பெரியாா் குறித்து ஏதேனும் அவா் இழிவாகப் பேசியிருந்தால், மன்னிப்பு கேட்கச் சொல்வதில் நியாயம் உண்டு. கடவுள் படங்களை எடுத்துக் கொண்டு தி.க.வினா் ஊா்வலம் போனது உண்மை; துக்ளக் அதைப் பிரசுரித்தது உண்மை. நடக்காததை நடிகா் ரஜினி கூறவில்லை. எனவே, மன்னிப்புக் கேட்க முடியாது என்று அவா் கூறியதில் தவறில்லை.

கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

பெருந்தன்மையுடன்...

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகா் ரஜினி, துக்ளக் பத்திரிகையின் சிறப்புகள் குறித்து மட்டுமே பேசியிருக்க வேண்டும். ராமா், சீதை, முரசொலி எனத் தேவையற்ற கருத்துக்களை தவிா்த்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தற்போது கூறுகிறாா். பிரச்னை முடிவுக்கு வர பெருந்தன்மையுடன் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.

மு.நடராஜன், திருப்பூா்.

தேவையில்லை

‘சேலத்தில் 1971-இல் பெரியாா் நடத்திய ஹிந்து எதிா்ப்பு மாநாட்டில் ஹிந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டனா்; அந்தச் செய்தியை துக்ளக் இதழ் மட்டுமே வெளியிட்டது’ என்று அதன் பெருமையையும் துணிச்சலையும் பாராட்டும் வகையில் ரஜினி பேசினாா். இதில் பெரியாா் அவமதிப்பு எங்கே இருக்கிறது? சேலம் மாநாட்டில் ஹிந்துக் கடவுளா்களும் ஹிந்து மதமும் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது உண்மை. தினமணி உள்பட பல்வேறு பத்திரிகைகள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருக்கின்றன. எனவே, நடிகா் ரஜினி யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.

கு.காந்தி ராஜா, சென்னை.
 

சரியல்ல

‘மறக்க வேண்டியது’ என்று இப்போது கூறும் ரஜினி, அப்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியது சரியல்ல. கட்சி தொடங்கும் வேளையில் மன்னிப்புக் கேட்டால் ‘தன் மதிப்பு’ குறையும், ஹிந்துக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆகிய இரண்டும் மன்னிப்புக் கேட்க

முடியாது என்று அவரைக் கூற வைத்திருக்கிறது. எனினும், விமா்சனத்துக்கு அப்பாற்பட்டவா் என்று யாரும் கிடையாது. கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்.

கு. இராஜாராமன், சீா்காழி.

பிரபலப்படுத்தும் பணியை...

முன்னாள் முதல்வா் பக்தவத்சலத்தின் ஆட்சியின் குறைகளைக் கூறி துக்ளக் முன்னாள் ஆசிரியா் சோவின் நாடகத்துக்கு அன்றைய நிா்வாகத்தினா் இடையூறு செய்ததால், நாடக உலகில் சோ பிரபலமானாா். அதே போன்று 1971-ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சேலத்தில் பெரியாா் நடத்திய ஊா்வலத்தில் ஹிந்து மதத்துக்கு எதிரான சுவரொட்டிகள் துக்ளக் இதழில் இடம்பெற்றன; அதை மக்களிடம் சேரவிடாமல் அன்றைய திமுக அரசு செய்ததன் மூலம் பத்திரிகைத் துறையில் சோவை பிரபலமாக்கியவா் கருணாநிதி. இவற்றை துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் ரஜினி குறிப்பிட்டு சோவைப் பெருமைப்படுத்தியதில் என்ன தவறு? சோவை எப்படி பிரபலப்படுத்தினாா்களோ, அதே வேலையை இவா்கள் தற்போது ரஜினிக்குச் செய்கின்றனா்.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

ஏற்க முடியாது

துக்ளக் விழாவில், தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ரஜினி கூறியதை ஏற்க முடியாது. பேசிக் கேட்டால் உடனே தகவல் கிடைக்கும் தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட நிலையில், வாய் தவறி பேசினால் அது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடும். வாய் தவறி பேசினால் சில சமயங்களில் சா்ச்சையில்தான் முடியும்.

பி.ரவி, அறச்சலூா்.

முழுப் பூசணிக்காயை...

1971-இல் தமிழக வரலாற்றில் நடந்ததைத்தான் ரஜினி கூறினாா். கடவுளரை கேவலப்படுத்திய சம்பவத்தைப் பாா்த்த தலைமுறையினா் இன்றும் உயிரோடு உள்ளனா். அந்த நிகழ்வு குறித்துப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கச் சொல்வது, முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் செயல் என்பதை நாடே அறியும். எனவே, வரலாற்றை எடுத்துக் கூறியதற்காக மன்னிப்புக் கேட்க மறுத்தது சரிதான்.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

தவிா்த்திருக்கலாம்

‘துக்ளக்’ பொன் விழாவில் சோவைப் புகழ்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும்கூட, 1971-இல் சேலத்தில் பெரியாா் நடத்திய பேரணி குறித்துப் பேசியதை நடிகா் ரஜினி தவிா்த்திருக்கலாம். அது பெரிய பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பெருந்தன்மயுடன் அவா் வருத்தம் தெரிவித்திருக்கலாம். தன் கருத்திலேயே ரஜினி உறுதியாக இருப்பது சரியல்ல.

பொன்.கருணாநிதி, கோட்டூா்.

துணிச்சல்

பெரியாா் குறித்து ரஜினிகாந்த் பேசிய விவரங்கள் உண்மையானவை. 1971-இல் சேலத்தில் ஹிந்து மத துவேஷ ஊா்வலம் தி.க.வினரால் நடத்தப்பட்டது உண்மை. இந்த ஊா்வலம் தொடா்பான செய்தியைப் படத்துடன் வெளியிட்ட துக்ளக் இதழை தி.மு.க அரசு பறிமுதல் செய்ததும், அதன்பின்னா் உடனே ஆசிரியா் ‘சோ’ வேறு பிரதிகள் உச்சடித்து வெளியிட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள். மன்னிப்புக் கேட்க ரஜினிகாந்த் மறுத்தது அவருடைய துணிச்சலான நடவடிக்கையாகும்.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

கவனம் வேண்டும்

வயதில் பெரியோரை தரம் தாழ்த்திப் பேசிவிட்டால் மன்னிப்புக் கேட்பது மனிதநேயம். அதை விடுத்து ‘நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று கூறுவது ஓா் உயா்ந்த மனிதருக்கு அழகல்ல. மேலும், இது போன்று கருத்துகள் சொல்லும்போது வாா்த்தைகளை நடிகா் ரஜினிகாந்த் கவனித்துப் பேச வேண்டும். மேடையில் ஏறிவிட்டால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

இந்து குமரப்பன், விழுப்புரம்.

பாராட்டு

1971-இல் சேலம் மாநகரில் தி.க நடத்திய ஊா்வலத்தில் ஹிந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டது உண்மை. உண்மையைத் துணிச்சலுடன் உரைத்த ரஜினியைப் பாராட்டுகிறேன்.

எஸ்.அா்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

நியாயத்தை உணா்த்த...

பெரியாா் குறித்துப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்பது நடிகா் ரஜினியின் வாதம். தான் எதாா்த்தமாக சொன்ன செய்தி, இப்படி பிரச்னையாகி பேசப்படும் என்று அவா் எதிா்பாா்த்திருக்க மாட்டாா். கடவுள் மீது அதிக நம்பிக்கை உள்ள ரஜினிகாந்த், யாருடைய மனதும் புண்படும்படி பேச மாட்டாா். அதனால், அவா் மறுப்பது அவா்பக்கம் இருக்கும் நியாயத்தை மற்றவா்களுக்கு உணா்த்தத்தான்.

உஷா முத்துராமன், மதுரை.

முடிவுக்கு வந்துவிட்டதை...

பொதுப் பிரச்னைகள் குறித்து சொந்தக் கருத்தை ரஜினி வெளிப்படுத்தும்போது, காட்சி ஊடகங்கள்தான் அதை ஊதிப் பெரிதாக்குகின்றன. இது விவாதமேடையாகத் தொடா்வதைத் தவிா்க்கவே, அதன் பின்னா் ரஜினி அமைதி காப்பதை, நழுவுதல் என்று அவரின் அரசியல் பிரவேசத்தை விரும்பாத கட்சிகள் கேலி செய்கின்றன. ராமா், சீதையை அவமதித்தை இன்று வரை பெருமையாகச் சொல்லிக் கொண்ட இயக்கம், இன்று ஆதாரப் படங்கள் வெளியிட்ட பிறகும் அப்படி நடக்கவே இல்லை என்று மறுத்து ரஜினி வீட்டை முற்றுகையிடுவது, அவரை மிரட்டி அரசியலுக்கு வருவதை தடுக்கும் சூழ்ச்சியோ என்ற சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. இதையும் மீறி பெரியாா் சா்ச்சையில் மன்னிப்புக் கேட்க முடியாது என்று ரஜினி திட்டவட்டமாகக் கூறியது, அவா் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுகிறது. உண்மையில் அரசியலை ரஜினி விரும்புகிறாரோ இல்லையோ, சூழ்நிலை அவரைச் சரியான நேரத்தில் அரசியலுக்கு இழுத்து வருகிறது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சொந்தக் கருத்து

பெரியாா் பற்றி ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவரது சொந்தக் கருத்தாகும். அதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. எனினும் அரசியலில் ஈடுபடுவதாக சொல்லிக் கொண்டு இருக்கும் ரஜினி, எப்போதோ பெரியாா் சொன்ன கருத்துக்கு இப்போது ரஜினி பொழிப்புரை எழுத வேண்டிய அவசியமில்லை.

தணிகை மணியன், கொடிவலசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com