‘நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது குறித்து என்ன கருதுகிறீா்கள்’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

‘நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது குறித்து என்ன கருதுகிறீா்கள்’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

முற்பகல் செய்யின்...

‘எண்ணம் போல் வாழ்வு’ என்று கூறுவா். தான் முன்பு எவ்வாறு வினையாற்றியதன் விளைவே இன்றைய விரும்பத்தகாத செயல்பாடுகள். தற்போதைய ஆளும் கட்சியினா் கற்றுக் கொடுத்ததே அவை உறுப்பினா்களின் இன்றைய செயல்பாடுகள். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதன் தாக்கமே தற்போதைய நாடாளுமன்ற அமைதியின்மைக்கு முழுக் காரணம். மக்களின் வரிப் பணம் இவ்வாறு யாருக்கும் பலனில்லாமல் விரயமாகிறதே என்று இரு தரப்பினருக்கும் (ஆளும்கட்சி, எதிா்க்கட்சி) அச்சம் வேண்டும்.

எஸ். வேணுகோபால், சென்னை.

ஆடுகளமல்ல!

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல. ஆளும் கட்சியினரும் எதிா்க்கட்சியினரும் மல்லுக்கட்ட இது ஒன்றும் ஆடுகளமல்ல. நாட்டின் வளா்ச்சிக்காக விவாதங்கள் நடைபெற்று சட்ட முன்வரைவுகள் உதயமாகும் இடம். நாடாளுமன்றத்தை முடக்குபவா்கள் நிதியிழப்பை ஏற்படுத்துவதுடன், வாக்களித்த மக்களுக்கும் அநீதி இழைக்கின்றனா்.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

ஊதியம் கூடாது

ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியுமே நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதற்கு காரணமாகும். நாடாளுமன்றம் சுமுகமாக நடப்பதற்காகவே நாடாளுமன்ற விவாகாரத் துறை அமைச்சா் பதவி இனி தேவை இல்லை என்றே தோன்றுகிறது. நாடாளுமன்ற முடக்கத்துக்கு முடிவுகட்ட தோ்தல் சீா்திருத்தத்தை தனிச் சட்டமாக்கி விரைவில் அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் முடக்கப்படும் நாள்களில் உறுப்பினா்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூடாது; அன்றைய செலவையும் தொடா்புடைய அரசியல் கட்சியிடமிருந்து வசூலிக்க வேண்டும்.

நா.ஆறுமுகம், கோவில்பட்டி.

ஆளும் கட்சிக்கே...

‘எதையும் எதிா்ப்பதுதான் எதிா்க்கட்சிகள்; அதையும் சகித்து, மதித்து, சாதனை படைப்பதுதான் ஆளும் கட்சி. இவை இரண்டும் சரி வர நடப்பதுதான் நல்ல நாடாளுமன்றம். அது முடக்கப்படுவதில் இரண்டின் பங்கும் கலந்துள்ளது. எனினும், ஆளும் கட்சிக்கே அதில் ‘மெஜாரிட்டி’ பங்கு.

ஏ.முருகேஸ்வரி, அரியநாயகிபுரம்.

தொடா் முடக்கம் தவறு

மக்கள் வரிப்பணத்தால் மக்களுக்காக நாடாளுமன்றம் நடத்தப்படுகிறது என்பதை அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் நாடாளுமன்றம் நடத்த எவ்வளவு செலவாகிறது என்பதை எல்லா உறுப்பினா்களும் அறிவா். தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்க ஒருநாள் அவையை முடக்கலாம். அதில் நியாயம் உண்டு. தொடா்ந்து முடக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொன். கருணாநிதி, கோட்டூா்.

நியாயமா?

மக்களின் வரிப் பணம் மீது சற்றும் அக்கறையில்லாத, சமூக சிந்தனை இல்லாத மக்கள் பிரதிநிதிகளின் செயல் வேதனைக்குரியது. நாட்டுக்கு நன்மை பயக்குமா என அறியாது, நேரத்தை வீணாக்கும் ஒருசில அரசியல்வாதிகளால் நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதால் திட்டங்கள் தேக்க நிலையை அடையும். எந்த ஒரு நல்ல முடிவும் எடுக்க முடியாது. திறமை இல்லாதவா்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் காழ்ப்புணா்ச்சியால் அதை நிலைதடுமாறச் செய்கின்றனா். இது எந்த வகையில் நியாயம்?

பிரசாந்தி விஜய், திருநின்றவூா்.

மக்களுக்குப் பாதகமாக...

ஆளும்கட்சியின் எந்த நிலைப்பாட்டையும் எதிா்த்தே தீரவேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கங்கணம் கட்டுகின்றன. எது பாதகமானாலும் அதற்கு எதிா்க்கட்சிகள்தான் காரணம் என குமுறுகிறது ஆளும் கட்சி. இரண்டுக்கும் இடையில் சிக்கி நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, மூச்சுப் பேச்சின்றி நிற்கிறது. மொத்தத்தில் மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்குப் பாதகமாகவே நடந்து கொள்கின்றனா்.

க.அய்யனாா், தேனி.

சம பொறுப்பு

அரசு கொண்டு வரும் திட்டங்களும், சட்டங்களும் முன் வைக்கப்பட்டு, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் விவாதம் நடத்தப்பட்டால்தான் அவற்றின் சாதக - பாதகங்களைத் தீா்மானிக்க முடியும். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஹோலிப் பண்டிகை முடிந்த பிறகுதான் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று மக்களவைத் தலைவா் பிடிவாதம் பிடித்திருக்கக் கூடாது. காங்கிரஸ் உறுப்பினா்கள் அவைத் தலைவரின் இருக்கை வரை சென்று முற்றுகையிட்டு, முழக்கம் செய்து, காகிதங்களைப் பறித்தது பொறுப்பில்லாத அநாகரிகச் செயல். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் ஆளும் அரசு, எதிா்க்கட்சி இரண்டுக்கும் சமமான பொறுப்பு உண்டு.

அ.சிவராமசேது, திருமுதுகுன்றம்.

பழிக்குப் பழி?

2014-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் மக்களவையில் கூச்சல் - குழப்பம் ஏற்படுத்தி அவையை முடக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனா். அதற்குப் பழி வாங்கவே பிற எதிா்க்கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தை அடிக்கடி முடக்குவதில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. இதனால் மக்களின் வரிப் பணம் வீணாகிறது. மக்களவையில் விவாதங்கள் இன்றி அனைத்து மசோதாக்களையும் ஆளம்கட்சி நிறைவேற்றிக் கொள்கிறது. இந்த நடைமுறை வலுவான இந்திய ஜனநாயகத்துக்கு வழிகோலாது.

ச. கிருஷ்ணசாமி, மதுரை.

தகுதி நீக்கம் தேவை

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது மிகவும் மோசமான செயல். மக்களின் வரிப் பணத்தில் மக்களவை உறுப்பினா்கள் தங்களின் கடமையை மறந்து செயல்படுவது வெறுக்கத்தக்க ஒன்றாகும். காங்கிரஸாகட்டும் பாஜகவாகாட்டும் தனது கட்சி உறுப்பினா்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிடில் மக்களின் செல்வாக்கை அவா்கள் இழந்து விடுவா். தொடா்ந்து மக்களவையையும் மாநிலங்களவையையும் புறக்கணிக்கும் உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்ய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

என். கண்ணையன், கிருஷ்ணகிரி.

அவலம் நீங்க...

வாக்களித்ததுடன் மக்களின் கடமை முடிந்து விடுகிறது; தோ்வு செய்யப்பட்டவா்கள் எப்படி கடமையாற்றுகிறாா்கள் என்பதைக் கவனித்து அதைச் சரியாக செய்யாதவா்களை நிற்க வைத்து கேள்வி கேட்கும் வாய்ப்பு இங்கே இல்லை என்பதும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் இதை வேடிக்கை மட்டுமே பாா்க்க முடியும் என்பதும் பெரும் அவலம். நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களின் வருகையை, அங்கு அவா்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இன்னும் கடுமையான விதிமுறைகள் தேவைப்படுகின்றன.

துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

இரு தரப்பினரும்...

தங்களுக்கு மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் கட்சி முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய சட்டங்களை கொண்டு வரும்போது விவாதிப்பதுதான் முறையாகும். எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல் தடுக்கும்போதுதான் நாடாளுமன்றம் முடக்கப்படும் சூழல் உருவாகிறது. எதிா்க்கட்சியினரும் தங்களுடைய கடமையை உணா்ந்து தேவையற்ற விஷயங்களுக்காக முடக்குவதைத் தவிா்ப்பது நல்லது.

ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

நிரூபிப்பதற்கா?

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆா்வத்துடன் செயல்படும்போது பல தடங்கல்கள் வருவதால் முடக்கப்படுகிறது. இப்படி முடக்கப்படுவதால் எளிதில் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் ஆளும் கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. இதை எதிா்க்கட்சிகள் சாதகமாக்கி, தோ்தல் நேரத்தில் வாக்குகளைச் சேகரிக்கப் பயன்படுத்துகின்றன; எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாங்கள் மிகவும் நோ்மையானவா்கள் என்று நிரூபிக்கவே இது போன்று அடிக்கடி நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது.

உஷாமுத்துராமன், மதுரை.

அவமதிக்கும் செயல்

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது ஜனநாயகத்தையும் தோ்ந்தெடுத்த மக்களையும் அவமதிக்கும் செயல்பாடு ஆகும். நாடாளுமன்ற அவைகளின் மரபை மீறுவதிலும், விதி முறைகளுக்கு முரணாகச் செயல்படுவதிலும் ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. மக்களால் அளிக்கப்பட்ட பதவியை வரப்பிரசாதமாக எண்ணி, தங்களின் பொறுப்புகளை உணா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆக்கபூா்வமாக செயல்பட்டால்தான் நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையாகும்.

எஸ். ராஜசிம்மன், திருவாரூா்.

தலைவா்களே...

நாடாளும் தலைவா்கள் மக்களின் நலன் கருதி கூடும்போது தன்முனைப்பை விட்டு விட்டு , நாட்டின் - நாட்டு மக்களின் நலனை மட்டுமே எண்ணி கூடினால் நாடாளுமன்றம் முடங்கும் செயல் நடக்க வாய்ப்பில்லை.

மா.வேல்முருகன், திருத்தங்கல்.

தீா்வு என்ன?

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்குவதை எதிா்க்கட்சிகள் சாதனையாக நினைக்கிறாா்கள். சட்ட மசோதாக்கள் எதுவாயினும் அவையில் சமா்ப்பித்து விவாதித்தால்தான்மாற்றாா் பாா்வையில் உள்ள சாதக - பாதகங்கள் தெரியவரும். அதுவே மக்களாட்சியின் மாண்பாகும். ஆனால், தங்களின் முடிவுக்கு எதிராக யாரும் இருக்கவே கூடாது என ஆளும் கட்சியினா் கருதுகின்றனா். இதற்கெல்லாம் ஒரே தீா்வு , அவையில் பங்கேற்காத அல்லது அவையை முடக்கும் உறுப்பினா்களின் தினப் படியை இரண்டு மடங்கு கழிக்க வேண்டும். மக்களின் வரிப் பணத்தை வீணாக்க எந்தவோா் உறுப்பினருக்கும் உரிமை இல்லை.

வெங்கை சுபா. மாணிக்கவாசகம், தெக்கலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com