வெல்லும் சொல்: கு.முருகேசன்
By கவிதைமணி | Published on : 11th June 2018 04:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிந்தனையில் பிறந்து மற்றவரை சிகரத்தில் ஏற்றும் எல்லாச் சொல்லும் வெல்லும் சொல்லே! தலையில் பிறந்து வாயில் தவழ்ந்து- அடுத்தவர் மனதைத் தொடும் மந்திரச் சொல்யாவும் வெல்லும் சொல்லே! உடைந்த இதயத்திற்கு மயிலிறகால் மருந்துபோடும் அன்பான சொல் அனைத்தும் வெல்லும் சொல்லே! வாழ்வில் துவண்டு விழும்போது தூக்கி நிறுத்தும் ஊக்கச் சொல் அனைத்தும் வெல்லும் சொல்லே! அறியாப் பருவம் தொட்டு ஆற்றுப்படுத்தும் அப்பாவின் அறிவுரை சொற்கள் எல்லாம் வெல்லும் சொல்லே! தவறுகளைச் சுட்டி தொண்டர்களை தட்டி தலைவன் சொல்லும் எச்சொல்லும் வெல்லும் சொல்லே! ஏக்கத்தை போக்கி ஊக்கத்தை தூக்கித் தரும் அன்புச் சொல் அனைத்தும் வெல்லும் சொல்லே! அடுத்தவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமரும் நல்லவர் சொல் என்றும் வெல்லும் சொல்லே! தாழ்ந்து கிடக்கும் சமூகத்தை தலைநிமிரச் செய்யும் சத்தான சொல் யாவும் வெல்லும் சொல்லே! சிதைந்த மனதை சீராட்டும் சொல்லும்! சிப்பாயியை சீறியெழச் செய்யும் சொல்லும்! சிந்தனையைத் தூண்டும் சிறிய சொல்லும் வெல்லும் சொல்லே! பொய்சாட்சி சொல்லும் சொல்லை மனசாட்சியே கொல்லும்! உண்மையைச் சொல்லும் எச்சொல்லும் வெல்லும் சொல்லே!