உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவுஇயந்த
இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வுஅரிது
உயிர்காள்,
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி, அயன், அரன்
என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்டது ஒன்றே.
உயிர்களே,
இவ்வுயிரின் தன்மை உணர்வையே இயற்கையாகக்கொண்டது, அணுவைப்போல் நுட்பமானது, பலதிசைகளிலும் அகன்றது, உயர்ந்தது, உருவத்திலிருந்து மாறுபட்டது.
இதனை நாம் கேள்விப்பட்டு உணர்கிறோம், பின் மனத்தால் உணர்கிறோம், பின் யோகத்தால் உணர்கிறோம், ஆனால் அதன்பிறகும், இறைவனின் தன்மையை உணர்ந்துவிட இயலாது.
வேறு என்ன செய்யலாம்?
அரி, அயன், அரன் என மூவராகவும் இருக்கிற இவரைப்பற்றிச் சொல்லும் நூல்களைப் பலமுறை வாசியுங்கள், ஆராயுங்கள், பிறருக்குச் சொல்லுங்கள்.
அப்படிச் சொல்லச்சொல்ல, உங்கள் மனத்தில் ஒரு விஷயம் (இறைவனைப்பற்றித்) தோன்றும், அதனை மனத்தால் பலமுறை சிந்தியுங்கள், சொல்லுங்கள், வணங்குங்கள்.