பாடல் - 3
ஊரும் புள், கொடியும் அஃதே, உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிர் ஆகில்,
தீரும் நோய், வினைகள் எல்லாம், திண்ணம், நாம் அறியச்சொன்னோம்,
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே.
எம்பெருமான் கருடனை வாகனமாகக் கொண்டவர், அவருடைய கொடியும் கருடன்தான். அவர் உலகையெல்லாம் உண்டு, உமிழ்ந்தவர், அத்தகைய பெருமான் சேர்ந்திருக்கும் திருவனந்தபுரத்துக்கு விரைவில் சென்று வணங்குங்கள், அவருடைய ஆயிரம் திருப்பெயர்களில் ஒன்றைப் பேசி வணங்குங்கள், அப்படி வணங்கினால் உங்களுடைய நோய்கள், வினைகள் அனைத்தும் தீர்ந்துபோகும், இது நிச்சயம், இதனை எல்லாரும் அறியும்படி நாம் சொன்னோம்.