பாடல் - 2
இன்று போய்ப் புகுதிர் ஆகில், எழுமையும் ஏதம் சாரா,
குன்றுநேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி, புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே.
எம்பெருமான் அருள்புரியும் திருவனந்தபுரத்துக்கு இன்றே செல்லுங்கள், எம்பெருமானை வணங்குங்கள், உங்களுக்கு ஏழேழ் பிறவிகளிலும் எந்தத் துன்பமும் வராது. குன்றுகளைப்போன்ற மாடங்களுக்கு அருகே குருந்தமரங்கள், செருந்திமரங்கள், புன்னைமரங்கள் போன்றவை நறுமணத்தோடு மலர்கின்ற திருவனந்தபுரத்துப் பெருமான், மாயனுடைய திருப்பெயர்களில் ஏதேனும் ஒன்றை நினைத்தாலே போதும், அது ஆயிரம் திருப்பெயர்களைச் சொன்ன பலனைத் தரும், பரமபதம் கிடைக்கும்.