பாடல் 9
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன், உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்
ஆழிவண்ணன், என் அம்மான், அம் தண் திருமாலிருஞ்சோலை,
வாழி மனமே, கைவிடேல், உடலும், உயிரும் மங்க ஒட்டே.
ஊழி முதல்வன் (ஊழிக்காலத்துக்கு முன்பு இருந்தவன், அனைத்துக்கும் காரணமாக அமைந்தவன்) என்று போற்றப்படுகிறவன் இவன் ஒருவனே என்னும்படி தனித்துவமானவன், ஊழிக்காலம்தோறும் உலகங்களைத் தன்னுள்ளே படைத்து, காத்து, அழித்து இயங்குகிற கடல்வண்ணன், என் அம்மான், அத்தகைய பெருமானின் மலை, அழகிய, குளிர்ந்த, திருமாலிருஞ்சோலை, என் மனமே, அம்மலையை எப்போதும் எண்ணிக்கொண்டிரு, மறந்துவிடாதே, உடலும் உயிரும் மங்கினாலும் பரவாயில்லை (வேறேதும் நமக்கு முக்கியமில்லை), எப்போதும் அந்தத் திருமலையோடு ஒட்டியிரு.