பாடல் 11
மான ஆங்கார மனம் கெட, ஐவர், வன்கையர் மங்க,
தான் ஆங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானை
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே.
எம்பெருமான் பக்தர்களுக்குள் தானே விருப்பத்துடன் வந்து புகுகிறான், மஹான், அஹங்காரம், மனம் ஆகிய மூன்றும் கெடும்படி, இந்திரியங்களாகிய ஐந்து வலியவர்கள் மங்கும்படி செய்கிறான், அவர்களும் தானே எனும்படி ஆகிறான், அத்தகைய பெருமானைப்பற்றி, வண்டுகள் மிடுக்கோடு சத்தமிடும் பொழில்கள் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் சொன்னார், அவற்றுள் ப்ரக்ருதியைத் தொலைக்கவேண்டிப் பாடிய இந்தப் பத்து பாடல்களும் திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றியவை.