பாடல் 7
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை, மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்,
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே.
எம்பெருமானின் அழகைக் கண்டு, உண்டு மகிழ்ந்தேன், இனி நான் மேலுலகத்துக்குச் செல்லவில்லை என்று ஒரு குறை உண்டா? (இல்லை. எம்பெருமானின் திருக்காட்சி மேலுலகத்தைவிட உயர்ந்தது.) பெருமானுக்கு உயர்ந்த திருத்தொண்டுகளை நான் செய்து மகிழ்ந்தேன், அவற்றின் நிறைவில் சொல்லப்படுகிற ‘நம’ என்ற சொல்லைச் சொல்லித் தொழுதேன், வண்டுகள் மகிழ்ச்சியோடு சுற்றிவருகிற சோலைகளால் சூழப்பட்ட திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், நான் கண்டு களிக்கும்படி என் கண்களுக்குள் நின்றான், அங்கிருந்து விலகவே இல்லை.