பாடல் 8
கண்ணுள் நின்று அகலான், கருத்தின்கண் பெரியன்,
எண் இல் நுண்பொருள், ஏழ் இசையின் சுவைதானே,
வண்ண நல் மணிமாடங்கள்சூழ் திருப்பேரான்
திண்ணம், என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே.
யாராலும் சிந்தித்து அறியமுடியாதபடி நுட்பமான தன்மையைக்கொண்டவன், ஏழிசையின் சுவையைப்போன்றவன், அழகிய, நல்ல மணிமாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருப்பவன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என் கண்ணிலே நிற்கிறான், அங்கிருந்து விலகுவதில்லை, எனக்குப் பரமபதத்தைத் தரவேண்டும் என்ற கருத்திலே உறுதியாக இருக்கிறான், அப்பெருமான் இன்றைக்கு என் மனத்திலே செறிவாகப் புகுந்தான், இது உண்மை.