பாடல் 11
காட்டித் தன் கனைகழல்கள், கடுநரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம்பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டு ஆய தமிழ்மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள், செவிக்கு இனிய செஞ்சொல்லே.
சத்தமிடும் வீரக்கழல்களை அணிந்த தன்னுடைய திருவடிகளைப் பக்தர்களுக்குக் காட்டினான் எம்பெருமான், அவர்கள் கடுமையான நரகத்தில் புகாதபடி செய்தான், அத்தகைய எம்பெருமானை, வாட்டாற்றிலே எழுந்தருளியிருக்கும் திருமாலை, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் தமிழ்மாலையாகிய ஆயிரம் பாடல்களிலே பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் வானவர்கள் விடாமல் கேட்டு மகிழ்வார்கள். இவை செவிக்கு இனிய சிறந்த சொற்களாகும்.