பாடல் 1
செஞ்சொற் கவிகாள், உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன், மாமாயன் மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள்கலந்து, நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே.
சிறந்த சொற்களைக்கொண்டு கவிதைகளை எழுதும் கவிகளே, உங்களுடைய உயிரைக் காத்துக்கொண்டு எம்பெருமானுக்கு ஆட்செய்யுங்கள், திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் வஞ்சக் கள்வர், சிறந்த மாயங்களைப் புரிபவர், மாயக்கவியாக வந்து என் நெஞ்சிலும் உயிரிலும் உள்ளே கலந்தார். தன்னருகே நிற்பவர்கள்கூட அறியாதவண்ணம் என் நெஞ்சையும் உயிரையும் உண்டு, அவை அனைத்தும் தானாகவே ஆகி நிறைந்தார்.