பாடல் 4
என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கைவிடான், ஞாலத்து ஊடே நடந்து உழக்கி,
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான், நண்ணா அசுரர் நலியவே.
எம்பெருமான், எல்லா உலகங்களும் எல்லா உயிர்களும் தானே எனும்படி நின்றான், உலகமெங்கும் நடந்து பழகி அனைத்தையும் இயக்குகிறான், நற்செயல்களோடு பொருந்தாத அசுரர்கள் நலிந்துபோகும்படி அவர்களை அழிக்கிறான், தெற்குத் திசைக்குத் திலகமாகத் திகழ்கிற திருமாலிருஞ்சோலை மலையைக் கைவிடாமல் அங்கிருந்து அருள்செய்கிறான், இத்தகைய பெருமான், என்னுடைய உடலைவிட்டு நீங்காமல் அங்கேயும் வீற்றிருக்கிறானே, எம்பெருமானின் திருவருள்தான் எப்படிப்பட்டது!