நூலிலிருந்து... - நாகா; பக்.288; ரூ.200; ஸ்ருதி பதிப்பகம், டி 69 - ஏ, ரெங்கா திரயம்பவா, காளப்பட்டி சாலை, சிவில் விமான நிலைய அஞ்சல், கோவை-641014.
நூல்களுடன் நட்புக் கொண்டு அவற்றுடன் நீண்டகாலமாக பழகிவரும் நாகா என்ற நாகசந்திரன், தனது அனுபவங்களையும், தான் படித்த நூல்களையும் பற்றியும், தன்னைக் கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்புதான் இந்நூல்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன் களமிறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய தொழிலதிபரைச் சந்தித்த அனுபவம், விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது, சிக்னல் நெரிசலில் தானம் செய்வதைப் பற்றிய நூலாசிரியரின் கருத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று சாலை விதிகளை மதிக்காமல் இருக்கும் இளம்தலைமுறையினரின் போக்கு என நூலாசிரியர் தனது அனுபவங்கள், அது தொடர்பான அவருடைய கருத்துகள் என தொகுத்தளித்திருப்பது மனதைத் தொடுகிறது.
நூலாசிரியர் தான் படித்த புத்தகங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். மகாத்மா காந்தியின் "சத்தியசோதனை' முதற்கொண்டு, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், நா.முத்துக்குமார், கண்ணதாசன் ஆகியோரின் நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் அருமை. உடற்பயிற்சி செய்ய, புத்தகம் வாசிக்க நேரம் இல்லை என்பவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளும் உள்ளன. "நூலிலிருந்து...' நூலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.