பெளத்தத்தின் மூவர் நெறி - வெ.வேதவல்லி; பக்.508; ரூ.390; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; 044- 2426 7543.
ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது.
பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்று நாம் பொதுவாக அறிந்திருப்பதை விட , அவர் அகிம்சையை உலகிற்கு பரப்ப மேற்கொண்ட தொண்டுகளை வரலாறாகப் புரட்டிப் பார்க்க இந்நூல் உதவுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் அருமையான சுருக்க உரைநூலாக இதைக் கருதலாம்.
பண்டைய வரலாற்றுச் சிறப்பையும், பழந்தமிழ் இலக்கியச் சுவையையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள பயன்படும் சிறந்த நூலாக இது அமைந்துள்ளது.
பொதுவாக வரலாற்று நூல்களைப் படிக்கும்போது சிலநேரங்களில் சலிப்பு ஏற்படும். ஆனால் இந்நூலில் பல புதிய செய்திகள், புதிய கோணத்தில் சுவையாகக் கூறப்பட்டுள்ளதால் ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.