ஒழுக்கம் - அரங்க.இராமலிங்கம்; பக்.192; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள்
குறித்து அவர் எழுதிய "ஒழுக்கம்', "தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு', "ஒளவையார்', "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது.
உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும் வாழ்க்கைத் தேவை காரணமாக ஒன்றாக இணைந்து வாழ - பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
"நாம் வாழுகின்ற காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வாழ்க்கை நெறி எதுவோ அதுவே ஒழுக்கம்' என்ற நூலாசிரியரின் "ஒழுக்கம்' குறித்த வரையறையைச் சுட்டிக்காட்டலாம்.
கற்பித்தலுக்கான பல நவீன வழிமுறைகளை விளக்கும் நூலாசிரியர், "பணம் ஈட்டும் நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாது மாணவர் நலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் செம்மையாகப் பணி செய்தல் வேண்டும்' என்பதை ஆசிரியர் பணிக்கான அடிப்படையாகக் கூறுகிறார்.
தற்காலப் பெண்கள் நாட்டுக்கும், மொழிக்கும் தொண்டு புரிவதற்கு ஒளவையார் மாபெரும் உந்துசக்தியாக இருப்பார் என்பதாகத்தான் நூலாசிரியரால் ஒளவையாரைப் பார்க்க முடிகிறது.
இறைவனாகிய தலைவன் மீது ஆண்டாள் கொண்ட காதல், பண்பாட்டு வரம்புகளைக் கடவாமல் பக்திச் சுவையை ஊட்டுவதாக அமைந்திருப்பது, சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் வரலாற்றை அறிவதற்கு பெரியபுராணம் பெருந்துணையாக பயன்படுவது, இக்காலத்துக்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக திருக்குறள் இருப்பது என இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய சிந்தனை வெளிச்சத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன.