தமிழ் வரலாறு - ரா.இராகவையங்கார்; பக்.251; ரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; 044-2526 7543.
தமிழ் மொழியின் மாண்பையும், தமிழர் பண்பாட்டின் சிறப்பையும் எடுத்துக்கூறும் நூல். "தமிழ்' எனப் பெயர் வந்ததற்கான காரணங்களை இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டு விரித்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். தேவாரத் திருமுறையினும் "தமிழன் கண்டார்' எனப் பணிப்பர். பண்டை நாளில் வழங்கிய அஸிரிய மொழியில் "தமுஸ்' என்பது பிதுர்லோகத்திற்கும் ஜீவலோகத்திற்கும் தெய்வம்; மரங்களை வளர்விப்பதும் பூமியைச் செடிகளால் உடுத்துவதும் அதுவே என வழங்குதல் கேட்கப்படுகின்றது. இதனால் இப்பெயரை அவர் பயிர்க் கடவுளுக்கிட்டு வழிபட்டனரென்று தெரியலாம்' என்பன போன்ற அரிய பல பதிவுகள் முதல் கட்டுரையில் உள்ளன.
வேதகாலம், ராமாயண காலம், பாரத காலம், பாணினீ காலம் - எனப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த அகத்தியர்கள் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. கடல்கோள் நிகழ்ந்ததற்கான சான்றுகளைப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டும்; மணிவாசகரின் திருக்கோவையார் மற்றும் தேவாரப் பாடல்களைக் கொண்டும் "சங்கம்' இருந்ததற்கான சான்றுகளையும் நிறுவியுள்ளார்.
தொல்காப்பியரின் சமயம், அக்காலத்து மன்னர்கள், முந்துநூல் உண்மை, பழந்தமிழர்களது தாயக்கொள்கை, தலையாய ஒத்து, தமிழர் கொள்கைகள், மாபுராணம் முதலிய தமிழ் வரலாறு தொடர்பான செய்திகள் அனைத்தும் இந்நூலில் உள்ளன.