ஆழ்மனதின் ஆற்றல் - கரம்பயம் ஆர்.சந்திர சேகர்; பக்.416; ரூ.340; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ) 044- 2433 2682.
ஆழ்மனதின் ஆற்றலை நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் சொல்லும் நூல். ஆழ்மனதைப் பற்றிய புரிதல்கள் இதுவரை கருத்து முதல்வாதத்தின் அடிப்படையில் மட்டுமே இருந்ததாகவும், ஆழ்மனதின் ஆற்றலை பொருள்முதல் வாத அடிப்படையில் புதிய கண்ணோட்டத்தில் விளக்கியிருப்பதாகவும் நூலாசிரியர் கூறியிருக்கிறார்.
நூலாசிரியர் தினம்தோறும் அதிகாலையில் தனக்குத்தோன்றும் கருத்துகளைக் குறிப்பெடுத்து வந்திருக்கிறார். அவற்றை இந்நூல் தொகுத்து வழங்குகிறது.
"எந்த கருத்து வடிவத்தை நாம் ஒப்புக்கொண்டு மனதில் பதிவிடுகிறோமோ, அதைத்தான் ஆழ்மனம் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறது. இவற்றைத்தான் நமது அனைத்து நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கும் விதத்தில் "மனநினைவுகளாக' ஆழ்மனம் சேகரித்து வைத்து, நமக்குப் பணிவான சேவகனாகச் செயல்படுகிறது. அந்த வகையில் நமது வெற்றி தோல்விகளுக்கு நமது மனமே பாதை அமைத்துத் தருகிறது' என்கிறார் நூலாசிரியர்.
ஆழ்மனம் பற்றிய நூலாக இருந்தாலும், சமகால உலக, இந்திய நிகழ்வுகள் குறித்த கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன. நியூமராலஜி குறித்த கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன. வித்தியாசமான நூல்.