சங்கரர் என்கிற புரட்சிக்காரர் - எம்.என்.கிருஷ்ணமணி; தமிழில்: க.ஜெயராமன்; பக்.464; ரூ.450; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ) 044- 2489 6979.
Shankara: The revolutionary என்று வழக்குரைஞர் எம்.என். கிருஷ்ணமணி எழுதிய ஆங்கில மூலத்தைத் தமிழில் க.ஜெயராமன் (87) அவர்கள் "சங்கரர் என்கிற புரட்சிக்காரர்' என்று மொழிபெயர்த்திருக்கிறார். இப்புத்தகத்தின் தலைப்பிற்கேற்ப ஆதிசங்கரரின் புரட்சிகரமான அத்வைத தத்துவங்களை அலசியிருக்கும் இந்நூலில், அவரின் தெய்வீகமான ஆச்சாரியர் என்னும் குரு பட்டத்தின் புனிதம் கெடாமல் அற்புதங்கள் நிகழ்த்தியதையும் ஒருசேர அலசப்பட்டிருக்கிறது.
சங்கரர் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடும் அத்தியாயம் மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சங்கரர் வாழ்ந்த காலம் கி.மு. 509லிருந்து 477வரை என்பதை நிறுவுவதில் ஆசிரியர் அளித்திருக்கும் தரவுகள் அவரது ஆராய்ச்சியின் உச்சம் என்று தெரிகிறது. காஞ்சி மடத்தின் முப்பத்தெட்டாவது பீடாதிபதியான அபினவ சங்கரரின் பிறப்பையும் காலத்தையும் சொல்லி அபினவரை ஆதிசங்கரர் என்று தப்பர்த்தம் செய்துகொண்ட வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கிறார்.
முறையான ஞானமின்றி செய்யப்படும் தவங்களும் தானதர்மங்களும் கங்கை போன்ற புனித நீராடல்களினாலும் கடைத்தேற முடியாது என்னும் தனது வாதத்தை பஜகோவிந்தத்தில் எழுதியிருக்கும் சங்கரர் சாட்சாத் புரட்சியாளரே என்று சங்கரரின் போதனைகள் அத்யாயத்தில் பல கருத்துக்களை ஆசிரியர் முன்வைக்கிறார்.
சங்கரரைப் பற்றிய முற்போக்கான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இந்நூலில், காஞ்சி, ஸ்ருங்கேரி, துவாரகா, பூரி, பத்ரிநாத் ஜோதிர்மடம் என்று பல்வேறு மடங்கள் அவரால் நிறுவப்பட்ட செய்திகளையும் அம்மடத்தின் பீடாதிபதிகளைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
சங்கரர் எனும் சர்வக்ஞரை மகானாக, குருவாக, சமூக சீர்திருத்தவாதியாக புரட்சியாளராக அறிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பைத் தருகிறது இந்நூல்.