அவ்வையார் படைப்புக் களஞ்சியம் - தாயம்மாள் அறவாணன்; பக்.693; ரூ.600; தமிழ்க்கோட்டம், சென்னை-29; 044- 2374 4568.
அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது.
சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல படைப்புகள், அவ்வையாரின் படைப்புகளாக அறியப்படுகின்றன. அவை அனைத்தும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆத்தூர், காரங்காடு, துளசிப்பட்டினம், குற்றாலம், முப்பந்தல், தாழக்குடி, குறத்தியரை, ஆலஞ்சேரி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அவ்வையார் கோயில்களைப் பற்றிய பல செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவ்வையார் நோன்பு பற்றியும் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அவ்வையார் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றுள்ள அரிய நூல்.