அலர்ஜி - கு.கணேசன்; பக்.133; ரூ.140; கிழக்குப் பதிப்பகம், சென்னை - 044-4200 6903.
"அலர்ஜி' குறித்து எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் விடையளிக்கும் நூல். தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த வேதிப் பொருள்கள் போன்ற ஏராளமான காரணங்களால் காய்ச்சல், தலைவலிக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்பட வைப்பது "அலர்ஜி' தான். இந்த "அலர்ஜி' எப்படி ஏற்படுகிறது, அதன் வகைகள், அதற்கான சரியான மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து தெளிவாக இந்நூல் விளக்குகிறது.
நாகரிகம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்குப் பலவகை செயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். உடலை அழகுபடுத்த உதவும் செயற்கைப் பொருள்களில் கலக்கப்படும் பலதரப்பட்ட வேதிப்பொருள்கள் சருமம் தொடங்கி உடலின் உள்ளுறுப்புகளையும் கூட கெடுக்கக் கூடியவை. அப்போதெல்லாம் "அலர்ஜி' நோய்களால் நாம் அவதிப்படுகிறோம்.
அலர்ஜி ஆகும் பொருள்கள், தும்மல் தரும் துன்பம், அரிப்பும் தோல் தடிப்பும், ஈசினோபிலியா, பால் ஒவ்வாமை, பணி சார்ந்த ஒவ்வாமை, பரிசோதனைகள்- சிகிச்சைகள் என ஒவ்வொரு அத்தியாயங்களும் "அலர்ஜி' நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த நூலைப் படிப்பதன் மூலம் "அலர்ஜி' நோய்கள் வந்து விட்டால், அவற்றின் கொடுமையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வதோடு, "அலர்ஜி' நோய்களுக்கு தற்போது உள்ள நவீன சிகிச்சைகளையும் அறிந்து கொள்ளலாம்.