காந்தி வந்தால் ஏந்தும் கருவி - கிருங்கை சேதுபதி; பக்.184; ரூ.175; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி-8.
தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் என பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.எளிய நடை குறிப்பிடத்தக்கது. “ நூலின் தலைப்பே நமக்கு படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. ராட்டையைப் பயன்படுத்திய காந்தி, இப்போது வந்தால், கணினி, செல்லிடப்பேசி, சூரிய ஆற்றலைச் சேகரித்து பயன்படுத்தும் கருவி என எதை பயன்படுத்துவார் என்ற கேள்விக்கு சரியான பதிலாக வேறொன்றைக் குறிப்பிட்டு நம் தேசத்துக்கு தேவை எது என்பதை ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
ஏற்கெனவே தினமணி நாளிதழில் இக்கட்டுரைகள் வெளி வந்தபோது அவற்றைப் படிக்க தவறியவர்கள் வாசிக்கும் வாய்ப்பை இந்நூல் ஏற்படுத்தித் தந்துள்ளது.