வேதாந்த மரத்தில் சில வேர்கள் - கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி; பக்.80; ரூ.80; சந்தியா பதிப்பகம், சென்னை 83; 044-2489 6979.
நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான்! அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரை
களைச் சிந்தனைக் கோவைகள் எனலாம்.
"மந்திரம் போல் வேண்டுமடா' என்ற கட்டுரையில், சொல் என்பது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வெறும் ஊடகம் அல்ல, அதற்கு திடமான உருவமும் செயலும் உண்டு என்பதாக இரு உதாரணங்களுடன் விளக்குகிறார். அறம் என்ற சொல்லுக்கு தீமை அளிப்பது என்ற பொருளும் உண்டு அல்லவா? வலிமை மிக்க மந்திரம் போன்ற சொற்களைக் கொண்டு தன் பாடல்களை மகாகவி இயற்றினார் என்ற சிந்தனையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே' கட்டுரையில், "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்கிற பிரபலமான பாரதி வரியில் வரும் "பாயுது காதினிலே' என்கிற பிரயோகம் சர்ச்சைக்குள்ளானதை விவரமாக எழுதுகிறார் நூலாசிரியர். தேன் எப்படி காதில் பாயும் என்பது
தான் சர்ச்சைக்காரர்களின் விவாத விஷயம்.
"பாரதியும் இசையும்' என்ற கட்டுரையில் இசை குறித்த மகாகவியின் பல மேற்கோள்களை விஸ்தரித்து தருகிறார்.
தான் பெற்ற பாரதி இன்பத்தை இந்தக் கட்டுரைகள் வாயிலாக நம்முடன் பங்கு வைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். பாராட்டுக்குரிய பணி அவருடையது.