உங்களாலும் முடியும் - பி.வி.பட்டாபிராமன்; பக்.280; ரூ.230; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; 044 - 2638 5272.
வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது.
நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மாறாவிட்டால் நிலைமை கேள்விக்குறியே என தனிமனிதனின் வெற்றி குறித்து இந்நூல் பேசுகிறது. தனிமனிதன் தன் மனதில் நம்பிக்கையை வளர்த்தல், பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், பிறருடனான உறவை மேம்படுத்துதல், தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளல் என வெற்றிக்கான நிறைய வழிமுறைகளை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள தொடர்பு, சமுதாயம் தனிமனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது, ஒட்டுமொத்த உலக அரசியல், பொருளாதார நிலைகளினால் தனிமனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள், வெற்றி, தோல்விகள் என தனிமனிதனின் வெற்றி, தோல்விகளை சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளோடு சேர்த்து ஆராயாமல், தனிமனிதனின் மனம், செயல்கள் என தனிமனிதனைச் சுற்றிச் சுற்றியே ஆராய்ந்து வெற்றிக்கு வழி சொல்லும் நூல்.