அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா? - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.86; ரூ.70; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; 044 - 2638 5272.
நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது.
நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை இல்லை. இந்தியாவில் மட்டும் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் ரொட்டி உற்பத்தி - வியாபார மதிப்பு 40 மில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதால் விஷ ரொட்டியைத் தடை செய்ய அரசு முன்வரவில்லை.
முடக்குவாத நோயை உண்டாக்கும் கேசரி பருப்புக்கு இந்தியாவில் தடை இல்லை. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் நாம் பெறும் அந்நியச் செலவாணியின் மதிப்பு 50 கோடி டாலர். இவ்வாறு நம்நாட்டில் அரசால் கடைப்பிடிக்கப்படும் உணவுசார்ந்த பல கொள்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக இந்நூல் பேசுகிறது. தினமணியில் வெளியான பெரும்பான்மையான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.