புறநானூறு (புதிய வரிசை வகை) - சாலமன் பாப்பையா; பக். 928; ரூ.800; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044-2436 4243.
புறநானூறு அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசாட்சி, அறச்செயல்கள், உலகத்து நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் உள்ளது உள்ளவாறு எடுத்துரைக்கும் ஓர் வரலாற்று ஆவணமாகும்.
"புதிய வரிசை வகை' என்பதற்கேற்ப, மன்னர்களின் கால வரிசைப்படியோ, திணை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதும், மன்னர் ஒருவரைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
புறநானூற்றின் பாடல்களை வரலாற்றுப் பார்வையுடனும், இன்றைய சிறார்கள், இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும், அவர்கள் நம் அரசர்கள் பற்றிய வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் வரிசைப்படுத்திக் கவிதை நடையில் தந்திருப்பது புதியதொரு சிந்தனை; அரியதொரு முயற்சி.
"அந்தக் காலத்து மன்னர்களுள் சிலர் வசதி படைத்தவர்களாக வாழ்ந்தார்களேயன்றி, வள்ளல்களாக வாழவில்லை; புத்த சமயத்தைச் சார்ந்த புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை; ஆதலால், பகைமை காரணமாக மொத்தமாக அழித்திருப்பார்களோ' என்று சில ஐயங்களையும் எழுப்பி, சிந்திக்க வைக்கிறார்.
நேர்மையான ஓர் ஆய்வாளருக்குள்ள தனித் தன்மையுடன், புறநானூற்றுப் பாடல்களை எளிமையான முறையில் அணுகியிருப்பதுடன், புறநானூறு தொடர்பான ஆய்வு நூல்கள் பலவற்றையும் துணைக்கொண்டு அரிய பல செய்திகளைப் பதிவு செய்திருப்பதைப் பாராட்டலாம்.