தெய்வப் புலவர் திருவாய்மொழி - அரங்க. இராமலிங்கம்; பக்.656; ரூ.500; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.
திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர்.
மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள், உலகியல் பார்வையோடு கூடிய "துறவு' அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு உயிரினங்களைக் கூறி அதன் மூலம் திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அறக்கருத்துகள் ஆகியவற்றை விளக்கியுள்ள இந்நூலில் அரிய பல செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களிலும், சீத்தலைச்சாத்தனார், திருமங்கை ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார், தோலாமொழித்தேவர், செகவீரபாண்டியனார் ஆகியோர் பாடல்களிலும் திருக்குறள் வெண்பாக்கள் எடுத்தாளப்பட்டுள்ள விதம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் உள்ள அனைத்து குறள்களுக்கும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. "அறிமுக இயலில்' திருக்குறளின் தோற்றம் மற்றும் அது உருவான சூழல், திருக்குறளின் சிறப்புகள், திரு என்னும் அடைமொழி, அகப்பொருள் சிறப்பு, மெய்ப்பொருள் நூல், அறநூல், பொருள்வகை நுட்பங்கள், நுண்பொருள் சிந்தனை, பருப்பொருள் சிந்தனை, குறள் திறனாய்வு நூல்கள் போன்றவை அறிந்துகொள்ள வேண்டிய பதிவுகள்.