பிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள் - ராபர்ட் எச்.ஷுல்லர்; தமிழில்: தர்மகீர்த்தி; பக்.264; ரூ.210; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; 044-2433 2682.
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் எச்.ஷுல்லர் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
யாருக்குத்தான் பிரச்னைகள் இல்லை? ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பாகுபாடின்றி எல்லாருக்குமே பிரச்னைகள் உண்டு. அவற்றை நேர்மறைச் சிந்தனையோடு எதிர்கொள்பவர்கள்தான் வெற்றிகொள்ள முடியும் என்பதை ராபர்ட் எச். ஷுல்லர் தனது வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான தருணங்களையும், அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்ததையும் எடுத்துக்காட்டி விவரித்துள்ளார்.
அவருக்கு தெரிந்தவர்கள், பின்னாளில் அறிமுகமானவர்கள் சந்தித்த பிரச்னைகள், அதற்கு அவர்கள் மேற்கொண்ட நேர்மறை நம்பிக்கைப் பார்வைகள் அவர்களை வெற்றியாளர்களாகப் பயணிக்க வைத்ததையும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பிரச்னைகளைச் சரியான கோணத்தில் அணுகுவதுதான். சிறிய குன்றை மலைபோல் எண்ணிப் பார்ப்பதை நிறுத்தினால், அதன் தீவிரத் தன்மை குறைந்துவிடும்.
பிரச்னைகளுக்கான சாத்தியக்கூறு சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அதை பின்பற்றினாலே வாழ்க்கை நம் வசமாகும்.
ஒரு பிரச்னை நம் நம்பிக்கையை இழக்கச் செய்யும்போது பிரச்னையைத் தீர்க்க 10 வகையான சாத்தியக்கூறு சிந்தனைகளை மேற்கொண்டு அவற்றைப் பட்டியலிடுங்கள்; அதுதான் வெற்றியின் ரகசியம் என்று வெற்றிக்கான ரகசியங்களை அற்புதமாகச் சொல்கிறது இந்நூல்.