சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம் -தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி; தொகுதி 1; பக்.296; ரூ.190; தொகுதி 2; பக்.720; ரூ.450; சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராயநகர், சென்னை-17.
பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்றத்தில் 1952 முதல் 1956 வரை ஆற்றிய உரைகள் முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1961 வரை ஆற்றிய உரைகள் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரின் பிரச்னைகளும், சாலை வசதி,தண்ணீர்ப் பிரச்னை, மருத்துவவசதி, விவசாயம், கல்வி, மொழிப் பிரச்னை என அனைத்தும் சட்டமன்ற விவாதங்களின் பேசுபொருளாகியிருக்கின்றன. எம்.கல்யாணசுந்தரம் இவை தொடர்பாக நடந்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசியவை தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. சமூகப் பிரச்னைகளில் ஆழ்ந்த அக்கறை உள்ளனவாக அவை இருக்கின்றன.
"நாம் மதுவிலக்கை எப்படி அமல்நடத்துவது? இது ஒரு கட்சிக்குரிய பிரச்னை அல்ல. ஆளும் கட்சிக்குரிய பிரச்னை அல்ல. எல்லாக் கட்சிகளுக்கும், நம் தேசத்திற்கும் பொதுவான பிரச்னை. மொழிச்சீர்திருத்தம், நில உடமைச் சீர்திருத்தம் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று மதுவிலக்கு அவசியம்.' "உண்மையிலேயே தமிழ்நாடு என்று பெயர் நமது நாட்டுக்கு வந்துவிட்டால், நாட்டிலுள்ள பஞ்சம், பட்டினி, வேலையில்லாத்திண்டாட்டம் இவை எல்லாம் போய்விடும் என்று யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடு என்று பெயரிட்டால் தமிழ்மக்கள் தாங்களும் தங்களது சொந்த மொழியிலேயே தங்களுடைய நாட்டினுடைய பெயரை வைத்திருக்கிறோம் என்ற உணர்ச்சியோடு இருப்பார்கள்' என்பன போன்ற சமகாலப் பிரச்னைகளுடன் தொடர்புடைய கருத்துகளை எம்.கல்யாணசுந்தரம் அப்போதே பேசியிருக்கிறார். 1952 முதல் 1961 வரையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் அதன் தொடர்ச்சியாக இப்போது உள்ளவற்றையும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.