மெய்ப்பொருள் கண்டேன் - எஸ்.ஆர்.சுப்ரமணியம்; பக்.348; ரூ.320; பழனியப்பா பிரதர்தஸ், சென்னை-14; 044- 2813 2863.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக எளிமையாக, சுவையாகச் சொல்லும் நூல். கி.மு.325 இல் மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் சிந்துசமவெளியைத் தாண்டி படையெடுத்து வந்து இந்திய மன்னர்களைத் தோற்கடித்தது, கி.பி.1175 இல் முகமது கோரி படையெடுத்து, அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆக்கிரமித்தது என அடிமையான வரலாற்றை ஒருபுறம் இந்நூல் சொல்கிறது. இன்னொருபுறத்தில் அடிமைத் தளையை எதிர்த்து வேலூர் கலகம், 1857 சிப்பாய் கலகம், திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தது. தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் போராட்டங்கள், 1928 இல் லாகூர் சதி வழக்கு, பகத்சிங் தூக்கிலிடப்பட்டது, காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள் என போராட்ட வரலாறும் இந்நூலில் விரிகிறது.
காந்தி தமிழ்நாட்டிற்கு 20 தடவைகள் (1896 -1946) வந்தது, தமிழ்நாட்டில் தங்கியிருந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், கலந்து கொண்ட போராட்டங்கள், நிகழ்ச்சிகள் என ஒரு கட்டுரை விளக்கிச் சொல்கிறது.
காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை விளக்கிச் சொல்லும் "காந்தியப் பொருளியல் மேதை டாக்டர் குமரப்பா' என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்கு தேசபக்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சிறந்த நூல்.