ஒரு துணைவேந்தரின் கதை தன் வரலாறு - பாகம் -3; சே.சாதிக்; பக்.512; ரூ.400; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044 - 2834 3385.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராக இருந்த நூலாசிரியரின் தன் வரலாற்று நூலின் மூன்றாம் பாகம் இந்நூல். அவருடைய ஆராய்ச்சிப்
படிப்புக்காக கனடா சென்றது, ஆராய்ச்சிப் படிப்பு முடித்து சென்னைக்குத் திரும்பி வந்து கிண்டி பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியர் பதவி, முதுநிலைப் பேராசிரியர் பதவி வகித்தது, ஙஐப- இல்
இயக்குநரானது வரையிலான நூலாசிரியரின் அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த பின்பு வேலை கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்போது நூலாசிரியரின் நண்பர் ஒருவர், ""உங்களைப் போன்ற உண்மை உழைப்பாளிகள், வெளிப்படையாகப் பேசுபவர்கள் நம்நாட்டில் சமாளிக்க முடியாது. வந்த சூட்டோடு கனடாவுக்குத் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று அறிவுரை கூறுகிறார். அதையும் மீறி அவர் சென்னையில் தனது பயணத்தைத் தொடர்கிறார். நண்பர் கூறிய அந்த வெளிப்படையாகப் பேசும் தன்மையினால் நூலாசிரியருக்கு பல்வேறு துன்பங்கள் தொடர்கின்றன.
நூலாசிரியர் உயர்ந்த பதவிகள் வகித்திருந்தாலும், வாழ்க்கை முழுக்க எதையும் கற்றுக் கொள்ளும் பண்பு அவருக்கு இருந்திருக்கிறது. அவர் கீழ் பணிபுரிந்த ஒருவரை கடுமையான வார்த்தைகளால் நூலாசிரியர் திட்டியபோது, அந்தப் பணியாளர் அவரைத் தனியாகச் சந்தித்து அதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "பணியாளர்களிடம் நாம் பேசுகின்ற பேச்சால் நல்லது கெட்டது இரண்டும் வரலாம் அவர்களின் நிலையைப் பொறுத்து அவர்களின் நினைப்பும் அமைந்துள்ளது. ஆகவே, ஆள் அறிந்து பேச வேண்டும் என்ற அனுபவம், நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியபோது எனக்குக் கிடைத்தது. இது நான் ஙஐப- இல் இயக்குநராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றுகின்ற போதும் பேருதவியாக அமைந்தது' என்று அதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அவர் பணி செய்த இடங்களில் அவர் சந்தித்த பிரச்னைகள், மேலதிகாரிகளிடம் அவருக்கிருந்த உறவு, முரண்பாடுகள், உயர் பதவிக்கு அவர் வரக் கூடாது என்பதற்காக பிறர் செய்த சதிவேலைகள், இவை அனைத்தையும் தாண்டி அவர் தன்னுடைய உழைப்பால் உயர்நிலையை அடைந்தது ஆகிய அனைத்து விஷயங்களும் நூலை வாசிப்பவர்களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன.