இருதய நோய்களும், இன்றைய மருத்துவமும் - த.கோ.சாந்திநாதன்; பக்.272; ரூ.180; உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை - 113; ) 044 -2254 2992.
வெறும் உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இதயம், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத உறுப்பாக எப்படி விளங்குகிறது? என்பதை எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. பெரிய அளவிலான மருத்துவக் கலைச் சொற்களையோ, புரியாத நோய்களின் பெயர்களையோ எடுத்துரைக்காமல், சாமானிய வாசகர்களை கவனத்தில் கொண்டு நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு.
இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன இதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நூலாசிரியர் விவரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, இதயத்தில் ஏற்படும் நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் உடலின் பிற உறுப்புகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? அவற்றை எத்தகைய அறிகுறிகளின் வாயிலாகக் கண்டறியலாம்? என்பவை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருப்பது இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.
பொதுவாக எத்தனையோ மருத்துவ நூல்களும், கையேடுகளும் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் இருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கும் இந்நூல், இதயத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான செயற்கூறுகளை எளிய வரைபடங்களுடன் எடுத்துரைக்கிறது.
மருத்துவம் தொடர்பான மேலும் ஒரு நூலாக அல்லாமல், வாசகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் முக்கிய நூலாக இது அமைந்துள்ளது என்றால், அது மிகையில்லை.