திருக்கயிலாய தரிசனம் (பயண அனுபவங்கள்) - டி.கே.எஸ்.கலைவாணன்; பக்.176; ரூ.125; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற திருமூலரின் வாக்கின்படி நூலாசிரியர் தாம் 2010-ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையை இந்நூலில் பயணக் கட்டுரையாகப் படைத்துள்ளார். திருக்கயிலாயத்துக்குச் சென்று வர மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். அத்துடன் இறை அருளும் தேவை என்பதை அவர் நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு நடத்தும் கயிலாய யாத்திரை குழுவில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்தும், தனியார் அழைத்துச் செல்லும் யாத்திரை குழுவில் பங்கேற்பது, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், இவை இரண்டிலும் உள்ள வேறுபாடுகள் குறித்தும், யாத்திரைக்கு எவ்வளவு செலவாகும், பயணத்தின்போது எதிர்கொள்ள வேண்டிய சிரமங்கள், கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள், பயணத்துக்கான முன்னேற்பாடுகள், பயணத்தில் செய்யக் கூடாத சில செயல்கள், உடல்நலத்தைப் பேண எடுத்துச் செல்ல வேண்டிய மருந்து பொருள்கள் என அழகாக இந்நூலில் பட்டியலிட்டுள்ளார்
ஆசிரியர்.
கயிலை மலை குறித்த குறிப்புகள், கயிலாயத்தை வலம் வரும் வழிகள், நடக்க வேண்டிய தொலைவு, பயணத்துக்கு ஏற்ற வழி, மலையேற்றத்தின்போது கவனிக்க வேண்டியவை, பார்க்க வேண்டிய இடங்கள், ஆலய தரிசனங்கள், மானசரோவர் ஏரியின் மகத்துவம், கயிலாய யாத்திரை வரைபடம், இன்னும் பிற அம்சங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
திருக்கயிலாய தரிசனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய நூல்.