மனவெளிப் பறவைகள் -தி.இராசகோபாலன்; பக்.248; ரூ.200; வானதி பதிப்பகம், தியாகராயநகர், சென்னை-17, ) 044-2434 2810
சமூகத்தில் நிலவும் அவலங்களை எந்தவித சமரமும் இல்லாமல் தனது பார்வையில் துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். மனிதநேயம், இலக்கியம், ஆன்மிகம் என பல துறைகளில் தேசத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும் என்கிறது "வாக்காளன்- ஒரு வேடிக்கை மனிதன்' என்ற கட்டுரை.
மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது "சித்தர் சொல் கேளீர்' என்ற கட்டுரை. "கலக மானுடப் பூச்சிகள்' என்ற கட்டுரையில் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பேச்சு இருக்கிறது; எழுத்து இருக்கிறது. கடப்பாரையும் பொக்லைனும் எதற்கு என வன்முறைக்கு எதிராக நூலாசிரியர் கேள்வியெழுப்புகிறார்.
நாட்டில் பாலியல் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவூட்ட வேண்டும். கல்வி, அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்கிறார்.
சமூகத்தின் அவலங்களை, அதற்கான தீர்வுகளை இலக்கியநயத்துடன் மிகவும் சுவையாக வெளிப்படுத்தும் சிறந்த நூல்.