முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்
சட்டத்தின் ஆன்மா
By DIN | Published On : 07th October 2019 03:48 AM | Last Updated : 07th October 2019 03:48 AM | அ+அ அ- |

சட்டத்தின் ஆன்மா- எம்.குமார் பக்.384: ரூ.280 வானதி பதிப்பகம்,சென்னை-17 ) 044-2434 2810
அரசு என்றால் என்ன, உலகளாவிய பல்வேறு ஆட்சிமுறைகள், அவற்றின் தன்மைகள், அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, அமெரிக்க அரசியலமைப்பின் தோற்றம், சுவிட்சர்லாந்து அரசியல் அமைப்பு உள்ளிட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
இந்த நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசியுள்ளது. குறிப்பாக நல்ல எண்ணம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாட்டில் மட்டுமே நல்லதொரு ஆட்சியும் நிர்வாகமும் நடப்பது சாத்தியம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூலாசிரியர் உணர்த்தியுள்ளார்.
அண்மையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி கோரிய வழக்கு, ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அனுமதி கோரிய விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது.
"தற்கால இந்திய நீதித்துறை' என்னும் கட்டுரையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகன் மோகன்லால் சின்ஹா பற்றிய தகவல்கள் நீதித்துறைக்கு சுதந்திரமான தனித்தன்மை வாய்ந்த அதிகாரம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் அமைப்பு முறைகள் மற்றும் அதிகாரப் பிரிவினைக் கோட்பாடுகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.