நான் செய்வதைச் செய்கிறேன் - ரகுராம் ஜி.ராஜன்; தமிழில்: ச.வின்சென்ட்; பக்.408; ரூ.399; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2 ; 04259-226012.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2016 வரை பணியாற்றிய நூலாசிரியர், தான் பணியாற்றிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், சந்தித்த பிரச்னைகள் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீண்டநாள் பயன்கள் இருக்கக் கூடும் என்றாலும், குறுகிய கால பொருளாதார இழப்புகள் அவற்றை மிஞ்சிவிடும் என்ற கருத்து நூலாசிரியருக்கு இருந்திருக்கிறது. பணவீக்கத்தை மேலாண்மை செய்வது, வாராக் கடன்கள் பிரச்னையைத் தீர்ப்பது, நிதித்துறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, அந்தச் சீர்திருத்தங்களை நிலையானதாக மாற்ற புதிய நிறுவன இயங்குமுறைகளுக்குள் அவற்றைக் கொண்டு செல்வது ஆகியவை அவர் பதவி வகித்த காலத்தின் சவால்களாக இருந்திருக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் கூறும் வழிமுறைகளை இந்நூல் விளக்குகிறது.
"இந்தியாவில் தயாரியுங்கள், இந்தியாவிற்காகக் தயாரியுங்கள்' என்ற பொருளாதாரக் கொள்கை சிறப்பானது என்று கருதும் நூலாசிரியர், அதற்கான தேவையை விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
"இந்தியா ஓர் எளிய மத்திய வருமான நாடாக வளர்ந்து வருகிறது. மத்தியிலிருந்து கட்டுப்படுத்த முடியாததாகவும், சிக்கலானதாகவும், பலவகைப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே அரசு பொருளாதாரத்தைக் கட்டளையிடும் உயரத்திலிருந்து பின்வாங்கிய, பொதுத்தேவைகளையும், நிர்வகிக்கும் சட்டத்தையும் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரச் செயல்பாட்டைப் பொதுமக்களிடம் விட்டுவிட வேண்டும். இந்தியா வேகமாக நிரந்தரமாக சமமான வழியில் முன்னேற வேண்டும் என்றால், அதன் மொத்த ஆற்றலையும் பயன்படுத்த அடுத்துவரும் ஆண்டுகளில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் பல தேவைப்படும்' என்ற அடிப்படையில் இந்தியாவின் கடன் சுமை, ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகள், வங்கிகளின் வட்டிவிகிதம், பணவீக்கத்துக்கும் வட்டி விகிதத்துக்கும் உள்ள உறவு ஆகியவற்றைப் பற்றி விரிவாக இந்நூல் பேசுகிறது.
உலகப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான அடிப்படைகளை விளக்கும் குறிப்பிடத்தக்க நூல்.