பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம் - மெலின்டா கேட்ஸ்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.344; ரூ.399; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாவது தளம், உஷா ப்ரீட் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் -462 003.
மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ், தனது கணவருடன் சேர்ந்து 2000 ஆம் ஆண்டில் பில்&மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார்.
உலகெங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவர்களை அதிலிருந்து விடுவிப்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கம். இந்த அறக்கட்டளைப் பணிக்காக மெலின்டா கேஸ் உலகில் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார்.
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதை பெண்கள் தீர்மானிக்க முடியாது. கல்வி கற்பதற்கான உரிமை, வேலைக்குச் செல்வதற்கான உரிமை, வெறுமனே வீட்டைவிட்டு வெளியே போய்விட்டு வருவதற்கான உரிமை, தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிடுவதற்கான உரிமை என உலகெங்கும் பெண்களின் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று கூறும் நூலாசிரியர், பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக ஆக வேண்டும் என்றால், அந்த சமத்துவம் அவர்கள் தங்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுப்பதிலிருந்து கிடைக்காது; மொத்தமாக வென்றெடுப்பதிலிருந்தே கிடைக்கும் என்கிறார். பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடையவர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.