செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும் (ஒரு சுற்றுலா வழிகாட்டி) - எஸ்.எல்.எஸ். பழனியப்பன்; பக்.88;ரூ.60; எஸ்.எல்.எஸ். பதிப்பகம், 24-1, போஸ்ட் ஆபிஸ் ரோடு, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்-630211.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த 96 கிராமங்களுக்கு செட்டிநாடு என்ற பொதுப்பெயர் உண்டு. செட்டி நாடு என்று சொன்னால் ஒரு தெரு முதல் மறு தெரு வரை நீண்டிருக்கும் செட்டிநாடு பங்களாக்கள்தாம் நினைவுக்கு வரும். கானாடு காத்தான், காரைக்குடி, ஆத்தங்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கடியாபட்டி உள்ளிட்ட 76 ஊர்களில் அத்தகைய கட்டடங்கள் இருக்கின்றன.
செட்டி நாடு பகுதியில் உள்ள இளையாத்தங்குடி, இரணியூர், பிள்ளையார் பட்டி, வைரவன் பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, மாத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள 9 கோயில்களும் நகர கோயில்களாகும். இவை தவிர, கொல்லங்குடி, காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, தாயமங்கலம், குன்றக்குடி, திருக்கோட்டியூர், கோவிலூர், காரைக்குடி, பிரான்மலை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களும், இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆலயமும் புகழ்பெற்ற செட்டி நாட்டு கோயில்களாகும்.
இந்நூல் செட்டிநாடு பகுதியில் உள்ள ஊர்களின் முக்கியத்துவத்தையும், அந்த ஊர்களில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கட்டடங்கள், கோயில்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. இவை தவிர, காளையார் கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில், திருக்கோஷ்டியூரில் உள்ள செளமிய நாராயணப் பெருமாள் கோயில், வேந்தன்பட்டியில் உள்ள நெய் நந்தீஸ்வர் கோயில் உள்ளிட்ட பல செட்டிநாட்டுக் கோயில்களின் அமைப்பு, சிறப்பு, கோயில்களுக்குச் செல்லும் வழி, அவை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் தொலைபேசி எண்கள் என பல தகவல்களை இந்நூல் கூறுகிறது. செட்டிநாட்டு சுற்றுலாவுக்கான முழுமையான சிறந்த கையேடாக இந்த நூல் உள்ளது.