திணைப்புலவரும் தெய்வப்புலவரும் - அ.தட்சிணாமூர்த்தி; பக்.136; ரூ.140; அய்யா நிலையம், மனை எண்: 10, ஆரோக்கிய நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613006.
புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, நாலடியார், சிலப்பதிகாரம் ஆகிய சங்க இலக்கியங்களைப் பற்றிய 15 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல். புறநானூறு எழுதப்பட்ட காலம், தொகுக்கப்பட்ட முறை குறித்த கட்டுரைகளில் புறநானூறு இரு பகுதிகளாக முதன்முதலில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதன் முதல் தொகுதியை பெருந்தேவனாரே தொகுத்திருக்கக் கூடும்
என்கிறார் நூலாசிரியர்.
சங்ககாலப் பாடல்கள் யாவும் அக்காலத்திய சமூகப் பொருளாதார வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுபவை என்பதை விளக்கும் கட்டுரைகளும், ஐங்குறுநூறு தொகை நூலல்ல; யாரோ ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆராயும் கட்டுரைகளும், பண்டையத் தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்து கொள்ள பட்டினப்பாலை உதவும் என்பதைக் கூறும் கட்டுரைகளும்
அடங்கியுள்ளன.
பண்டைத் தமிழகத்தில் வெவ்வேறு வாழ்க்கைநிலைகளையுடைய திணை சார்ந்த மக்கள் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது என்பதைச் சொல்லும் "சங்க இலக்கியங்களும் திணைக் கலப்புமணமும்' கட்டுரை, முத்தரையர் மன்னர்களின் காலத்திலேயே நாலடியார் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறும் "நாலடியின் தோற்றம் பற்றிய பழ மரபுக்கதைகள்' கட்டுரையும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக விளங்குகின்றன.