நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்) - ஜே.ஜி.சண்முநாதன்; பக்.160; ரூ.120; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; 0422- 2382614.
கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 - ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
மிக எளிமையாகவும், உலகியல் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது.
"தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில் மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை பெற்ற பின்னரும், தேசம் விழித்தெழாமல் உறங்குவது விதியின் விளையாட்டாகும்' என வேதனைப்படுகிறார். "கடவுள் நாம் சுவாசிக்கின்ற காற்றைப் போல நமக்குத் தேவை; துளி கூட சமூகப் பாதுகாப்பில்லாத சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவனுக்கும், நசுக்கப்பட்டவனுக்கும் இருக்கிற ஒரே பாதுகாப்பு கடவுள்தான்' என்கிறார்.
"மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்னியமானவர்கள் என்பதே கொடுமையானது' என்று கூறும் நூலாசிரியர், கூட்டுக் குடும்பங்களின் மேன்மை, இன்றைய நாளில் முதியோரின் நிலை ஆகியவை குறித்தும் தனது தெளிவான கருத்துகளை முன் வைக்கிறார். சமூக அக்கறையுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.