புரிந்ததும் புரியாததும் - வெ.இறையன்பு; பக்.232; ரூ.200; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044- 2431 4347.
"மனமெல்லாம் மகிழ்ச்சி', "பகட்டும் எளிமையும்', "திருமண பந்தம்',"நயத்தகு நாகரிகம்', "பெருந்தன்மை பேணுவோம்' உள்ளிட்ட 10 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
எடுத்துக் கொண்ட ஒரு பொருள் பற்றி பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து சரியான தீர்வுகளை வாசகர்கள் தெரிந்து கொள்ள உதவும்வகையில் மிகச் சிறப்பாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
கட்டுரைகளின் இடையிடையே பளிச்சிடும் சிந்தனை மின்னல்கள் வியக்க வைக்கின்றன.
"மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை மரணமே; நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க தகுதிக்கேற்ப, தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப, வயதுக்கேற்ப, பதவிக்கேற்ப, வருமானத்திற்கேற்ப வாழ்வதுதான் வழி', "நாகரிகம் என்பது அடுத்தவர்கள் முன்பு நடந்து கொள்வது மட்டுமல்ல. தனியாக இருக்கும்போது ஒருவர் தங்களை எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறார் என்கிற பண்பே அது', "அதிகப் பேரால் மதிக்கப்படுகிறவர்கள் அதிக பயத்தோடு வாழ்கிறார்கள்' என்பவை சில உதாரணங்களே.
"வழக்கமான சிந்தனை பாதுகாப்பானது. ஆனால் அதை மேற்கொள்பவர்கள் ஓர் அங்குலம் கூட நகராமல், அதே இடத்திலேயே எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள்' என்கிற நூலாசிரியர், வித்தியாசமாகச் சிந்திக்க இந்நூலில் வழிகாட்டியிருக்கிறார்.