கல்லிலே கலைவண்ணம்: அதிசயக் கோவில் அங்கோர் வாட் - அமுதன்; பக்.272; ரூ.150; தினத்தந்தி பதிப்பகம், சென்னை-7; 044 -2530 3336.
கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார்.
கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. வைகுண்ட பெருமாள் கோயிலின் நுழைவு வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று அடுக்குகளாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. சந்நிதியைச் சுற்றி அகழி உள்ளது.
வெளிப்பிரகாரத்தில் சிற்பங்கள் உள்ளன. இதேபோன்று கம்போடியா நாட்டு அங்கோர் வாட் கோயிலிலும் உள்ளது.
அங்கோர் வாட் கோயிலின் பெயர் விஷ்ணு லோக். வைகுண்ட பெருமாள் கோயிலின் இன்னொரு பெயர் பரமேசுவர விண்ணகரம்.
கம்போடியாவில் உள்ள தா புரோம் கோயிலின் கட்டடங்களின் மீது மரத்தின் வேர்கள் ஆக்ரமித்திருப்பது, ஓம் என்ற பிரணவ ஒலியைப் பெயராகக் கொண்ட ஓக் யோம் என்ற சிவன் கோயில், நந்திக்காகக் கட்டப்பட்டுள்ள பிரீயக் கோ கோயில், ஓர் அங்குல இடைவெளி கூட இல்லாமல் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பண்டி ஸ்ரீ கோயில், 108 கோபுரங்களை உடைய புனாம் பாகெங்க் கோயில் என நிறைய கம்போடிய கோயில்களைப் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஓராண்டில் 6 மாதம் வடக்கு நோக்கியும், 6 மாதங்கள் தெற்கு நோக்கியும் ஓடும் டோன்லே சாப்நதி, மிதக்கும் வீடுகள் உள்ள டோன்லே சாப்ஏரி என கம்போடியாவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறந்த நூல் இது.