ரமணரின் பார்வையில் "நான் யார்?' - வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை...- அபிநவ ராஜகோபாலன்; பக்.280; ரூ.175; நர்மதா பதிப்பகம், சென்னை - 17; 044-2433 4397.
அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான்.
வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது.
நான் யார்? என்ற கேள்வியை நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, சைவ, வைணவ நெறிகளின் மூலம் வேத மார்க்கம், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் வழியில் விளக்கமளித்துவிட்டு, நிறைவாக ரமண மார்க்கத்திலும்
இந்தக் கேள்வியை மிகச் சிறப்பாக ஆராய்ந்துள்ளது இந்நூல்.
படிப்பு, வேலை, வருமானம் என எங்கும் எப்பொழுதும் புறத்தே ஒழுகும் மனதை, சற்று அகத்தே திருப்பி, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பதை அறிந்துகொண்டால் இன்றைய சமுதாயத்தில் நான் யார்? என்ற கேள்விக்கு விளக்கமும் விடையும், கிடைக்கும் என்று நூலாசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்களுக்கு கிடைத்த வழிகாட்டியாகும் இந்நூல்.