பூக்கூடை
பூக்கூடை - படம் ஒன்று, கதைகள் முப்பத்தெட்டு; தொகுப்பாசிரியர்: பாலகணேஷ் ; பக். 160; விலை: 160; வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், சென்னை-600078.
ஓர் ஓவியத்துக்குப் பொருத்தமான சிறுகதை எழுதும் போட்டியில் பரிசு பெற்ற 38 கதைகளின் தொகுப்பு. 38 எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை வளத்தால் இந்நூலை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்.
நகரின் பரபரப்பான சாலையில் காரை ஓட்டும் இளம்பெண், காரின் மேற்கூரையில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இளைஞன், இந்த விசித்திரக் காட்சியை வேடிக்கை பார்க்கும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் பார்வையிடும் தம்பதி ஆகியோர் மட்டுமே அடங்கிய ஓர் ஓவியம். அந்த இளைஞனை அப்பெண்ணின் கணவனாக, காதலனாக, கல்லூரி மாணவனாக, அந்த ஏரியா ரௌடியாக என பல கோணங்களில் சித்திரிக்கும் ஒவ்வொரு கதையின் களமும், கருவும் தற்கால வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கின்றன.
பேஸ்புக்கில் வித்தியாசமாகப் பதிவு போடுவதற்காக, பெண்ணுக்கு சீதனமாகக் கொடுத்த காரில் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வந்ததாக விவரிக்கும் தீபி எழுதிய "அதிகாரப் பிச்சை', அகிலா ராமசாமி எழுதிய "கார் கட்டு', சுதா ரவி எழுதிய "கடத்தல் கல்யாணம்', பாலகணேஷ் எழுதிய "துல்லியமான குற்றம்' உள்ளிட்ட பல கதைகள் இளைஞர்களுக்கு சிந்தனை விருந்தாக அமைந்துள்ளன.