வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது- பவித்ரா நந்தகுமார்; பக்.150; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ) 044 - 2434 2926.
நூலாசிரியரின் 17 சிறுகதைகளின் தொகுப்பு. நிகழ்கால வாழ்வில் ஏற்படும் யதார்த்தமான பிரச்னைகளைக் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு.
சிறுவயதில் செய்யாத தவறுக்குத் தன் தோழியின் வீட்டினர் தந்த தண்டனையும், அவமானமும் நடுத்தர வயதை எட்டியும் கதையின் நாயகியை வேதனைப்படுத்தி விடுகிறது. ஒரு ரயில் பயணத்தில் அவளது மன உளைச்சலுக்குத் தீர்வு கிடைக்கிறது. இதுதான் "மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மென்ட்' சிறுகதை.
நான்கு மனித மிருகங்களால் ஓர் ஏழைப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, காவல்துறையிடம் புகார் கொடுக்காமல், இரும்புலி மாசாணி அம்மன் கோயிலில் பிராது எழுதிப் போடுவதைச் சொல்லும் "வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது' சிறுகதை, விவசாயியின் நேர்மையைச் சொல்லும் "பயிர்க்கடன்' சிறுகதை, கட்டடத் தொழிலாளர்களின் சிரமத்தைப் படம்பிடித்துக் காட்டும் "நினைவுப் பகடைகள்' சிறுகதை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
"வாடகைக்கு வீடு தேடி' , "சொந்த வீடு', "சாமியாடி' , "முதுமை+தனிமை=?', "கழற்றி வைத்த தாலி' உள்ளிட்ட சிறுகதைகளும் வாசகர்களைக் கவரும். தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தாமல் வாழ்க்கையையே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.